Chidambaram Govindaraja Perumal Temple History in Tamil


Chidambaram Govindaraja Perumal Temple History in Tamil

உள்ளடக்கம்

திருத்தலம்
கோவிந்தராஜப் பெருமாள் கோவில்

மூலவர்
கோவிந்தராஜர் (பார்த்தசாரதி, சக்கரவர்த்தி திருமகன்)

உற்சவர்
தேவாதிதேவன்

அம்மன்
புண்டரீகவல்லி

தீர்த்தம்
12 தீர்த்தங்கள்

ஆகமம்/பூஜை
வைகானஸம்

புராண பெயர்
திருச்சித்திரக்கூடம்

ஊர்
சிதம்பரம்

மாவட்டம்
கடலூர்

Thiruchitrakoodam Govindaraja Perumal Temple
கோவிந்தராஜப் பெருமாள் கோவில் வரலாறு
🛕 கைலாயத்தில் ஒரு சமயம் சிவனும், பார்வதியும் மகிழ்ச்சியாக ஆனந்த நடனமாடினர். நடனம் முடிந்ததும் தங்களில் யார் நன்றாக ஆடியது என அவர்களுக்குள் சந்தேகம் எழுந்தது. பிரம்மாவிடம் தங்களின் சந்தேகத்தைக் கேட்டனர். அவரால் சரியாக தீர்ப்பு சொல்ல முடியவில்லை. எனவே இருவரும் தங்களுக்கு தீர்ப்பு சொல்லும்படி மகாவிஷ்ணுவிடம் கேட்டுக்கொண்டனர்.
🛕 மகாவிஷ்ணு தேவசிற்பியான விஸ்வகர்மாவைக் கொண்டு இங்கு ஒரு சித்திரை சபையை அமைத்து, அதில் நடன போட்டியை வைத்துக் கொள்ளும்படி கூறினார். சிவனுக்கும், பார்வதிக்கும் நடனப்போட்டி ஆரம்பமானது. சிவன் தன் தாண்டவங்கள் அனைத்தையும் ஆடிக்காட்டினார். பார்வதிதேவியும் சலிக்காமல் அவருக்கு ஈடு கொடுத்து ஆடினார்.
🛕 ஒருவரை ஒருவர் மிஞ்சும்படி இருவரும் ஆடிக்கொண்டிருக்க இறுதியில் தன் வலக்காலைத் தூக்கி தலைக்கு மேலே நிறுத்தினார் சிவன். பார்வதியால் காலைத் தூக்கி ஆட முடியவில்லை. எனவே, சிவனே வெற்றி பெற்றதாக அறிவித்தார் மகாவிஷ்ணு . பின் சிவன் இங்கு நடராஜராகவே எழுந்தருளி, மகாவிஷ்ணுவையும் இங்கேயே தங்கும்படி கூறினார். விஷ்ணுவும் பள்ளிகொண்ட கோலத்தில் தங்கினார்.

புண்டரீகவல்லி
🛕 அசுரகுலத்தைச் சேர்ந்த தில்லி என்பவள் பெருமாளிடம், “தான் மரங்கள் நிறைந்த வனமாக இருக்க விரும்புவதாகவும், அவ்விடத்தில் சுவாமி எழுந்தருள வேண்டும்” என்றும் வேண்டினாள். விஷ்ணுவும் அருள்புரிய அவளே சிதம்பரத்தில் தில்லை மரங்களாக வளர்ந்து நிற்க விஷ்ணு இத்தலத்தில் பள்ளி கொண்டார். தலமும் “தில்லை நகர்” எனப்பட்டது. தாயார் புண்டரீகவல்லி தனிச்சன்னதியில் இருக்கிறாள். பிரகாரத்தில் சுவாமியின் பாதத்திற்கு நேரே அவரது திருவடிகள் இருக்கிறது. இதனை வணங்குபவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
🛕 கஜேந்திரவரதரை தூக்கிய கோலத்தில் கருடாழ்வார், நரசிம்மர், வேணுகோபாலர், பதஞ்சலி மகரிஷி, ஆண்டாள், ஆஞ்சநேயர் ஆகியோரும் இருக்கின்றனர்.
கோவில் சிறப்பு
🛕 பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 41 வது திவ்ய தேசம். மகாவிஷ்ணுவின் நாபிக்கமலத்தில் இருக்கும் பிரம்மா நான்கு முகங்களுடன் அமர்ந்த கோலத்தில்தான் இருப்பார். ஆனால், இங்கு வித்தியாசமாக நின்ற கோலத்தில் இருக்கிறார். பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமான இங்கு “மகாவிஷ்ணு ஆகாயத்தை பார்த்தபடி” இருப்பது சிறப்பு.
🛕 தன்னைப் படைத்த மகாவிஷ்ணு நடனப்போட்டிக்கு தீர்ப்புச் சொல்வதற்காக சபையில் இருந்தபோது, அவருக்கு மரியாதை கொடுப்பதற்காக பிரம்மா நின்றபடியே இருந்தாராம். இதனை உணர்த்தும் விதமாக இங்கு பிரம்மா நின்ற கோலத்தில் இருக்கிறார் என்கின்றனர்.
கோவில் அமைப்பு
🛕 மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் சாத்வீக விமானம் எனப்படும். உற்சவர் தேவாதிதேவன் தாயார்களுடன் அமர்ந்த கோலத்திலும், மற்றோர் உற்சவர் சித்திரக்கூடத்துள்ளான் சுவாமியின் பாதத்திற்கு அருகில் நின்ற கோலத்திலும் இருக்கின்றனர். சித்ரசபை எனப்படும் இக்கோவிலில், நடராஜர் சன்னதிக்கு அருகிலே கோவிந்தராஜப் பெருமாள் கொடிமரத்துடன் தனிக்கோவில் மூலவராக இருக்கிறார். பெருமாள் சன்னதிக்கு முன் மண்டபத்தில் நின்று பார்த்தால் “நடராஜர், கோவிந்தராஜர் மற்றும் அவரது நாபிக்கமலத்தில் இருக்கும் பிரம்மா ஆகிய மூவரையும் ஒரே நேரத்தில் தரிசனம்” செய்யலாம். இந்த தரிசனம் மிகவும் விசேஷமானது.

மோட்சம் தரும் தலம்
🛕 கவேரன் எனும் கலிங்க நாட்டு அரசனுக்கு லோபமுத்திரை எனும் மகள் இருந்தாள். லோபமுத்திரையை திருமணம் செய்து கொண்ட அகத்தியர் அவளை காவிரி நதியாக மாற்றினார். அந்நதியில் தினமும் நீராடிய கவேரனும் அவன் மனைவியும் தங்கள் மகளிடம், முக்தியடைய வழி கேட்டனர். அவர்கள் முன் தோன்றிய காவிரி, “தில்லைநகர் சென்று பெருமாளை குறித்து தவம் செய்து வந்தால் அவர் தரிசனத்தால் முக்தி கிடைக்கும்,” என்றாள். அதன்படி கவேரனும், அவன் மனைவியும் இத்தலத்திற்கு வந்து தவம் இருந்தனர். அவர்களுக்கு “மகாவிஷ்ணு ஸ்ரீதேவி, பூதேவியுடன் பாற்கடலில் பள்ளிகொண்ட கோலத்தில் காட்சி தந்து மோட்சம்” கொடுத்தார்.
பிரார்த்தனை: வேண்டிக்கொண்ட செயல்களில் வெற்றிபெற, நீதி தவறாமல் இருக்க இங்கு வேண்டிக்கொள்ளலாம்.
நேர்த்திக்கடன்: பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.
Chidambaram Govindaraja Perumal Temple Festival
திருவிழா: சித்திரையில் 10 நாட்கள் வசந்த உற்சவம் மற்றும் கஜேந்திர மோட்ச விழா.
Chidambaram Govindaraja Perumal Temple Timings
திறக்கும் நேரம்: காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 10.30 மணி வரை திறந்திருக்கும்.

 
Chidambaram Govindaraja Perumal Temple Address
🛕 அருள்மிகு கோவிந்தராஜப்பெருமாள் திருக்கோவில், திருச்சித்ரக்கூடம் – 608 001, (சிதம்பரம் நடராஜர் கோவிலின் உள்ளே அமைந்திருக்கிறது).
Contact Number: +91 4144222552, +91 98940 69422.
 

No comments

Leave a Reply