நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

மொச்சை பருப்பு சாதம் செய்முறை | Mochai paruppu sadam recipe in tamil

மொச்சை பருப்பு சாதம் செய்முறை | Mochai paruppu sadam recipe in tamil


– Advertisement –

வளரும் குழந்தைகளுக்கு புரதச்சத்து என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. அப்படிப்பட்ட புரதச்சத்து தானிய வகைகளில் பருப்பு வகைகளில் அதிக அளவில் கிடைக்கின்றன. அப்படி அதிக அளவில் கிடைக்கக்கூடிய பருப்பு வகைகளை வைத்து நாம் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் சாதம் செய்து தருவதன் மூலம் அவர்கள் ஆரோக்கியமாக வளருவார்கள். அந்த வகையில் தான் இன்று நாம் மொச்சை பருப்பை வைத்து செய்யக்கூடிய ஒரு சாதத்தைப் பற்றி இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.
மொச்சை கொட்டையில் நம்முடைய உடலுக்கு தேவையான அளவு புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் மினரல் போன்றவை இருக்கிறது. மேலும் இதில் விட்டமின் இ அதிக அளவில் இருக்கிறது. மொச்சைக்கொட்டையை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலில் இருக்கக்கூடிய கொழுப்புகள் குறைகிறது. இதனால் உடல் எடை வேகமாக குறையும். மேலும் இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் செரிமான பிரச்சனை சரியாகும். மலச்சிக்கல் வராமல் தடுக்கப்படுகிறது. உடலில் இருக்கும் திசுக்களின் வளர்ச்சிக்கு மொச்சைக்கொட்டை உதவுகிறது. பெருங்குடல் புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய் வராமல் தடுப்பதற்கும் ரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்கவும் இது உதவுகிறது.
– Advertisement –

தேவையான பொருட்கள்

அரிசி – 1/2 கிலோ,
வெள்ளை மொச்சை – 1/4 கிலோ
துவரம் பருப்பு – 100 கிராம்
சின்ன வெங்காயம் – 125 கிராம்
கருவேப்பிலை – 2 கொத்து
சீரகம் – ஒரு டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 8
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
கடலை எண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
உளுந்து – 1 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 4
பெருங்காயம் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 2 கிளாஸ்
கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு
நெய் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை
முதலில் மொச்சையை முதல் நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளுங்கள். மறுநாள் காலையில் அரிசி, மொச்சை, துவரை இது மூன்றையும் ஒன்றாக குக்கரில் போட்டு ஒரு கிளாஸ்-க்கு நான்கு கிளாஸ் என்ற வீதம் தண்ணீர் ஊற்றி ஐந்து விசில் விட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் சின்ன வெங்காயம் 75 கிராம், கருவேப்பிலை ஒரு கொத்து, சீரகம், காய்ந்த மிளகாய், மஞ்சள் தூள் இவற்றை சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் கடலெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு சேர்க்க வேண்டும். கடுகு வெடித்து உளுந்து சிவந்ததும் பச்சை மிளகாயை இரண்டாக கீரி அதில் சேர்க்க வேண்டும். பிறகு ஒரு கொத்து கருவேப்பிலையை சேர்த்து பச்சை மிளகாய் லேசாக சிவந்ததும் 50 கிராம் சின்ன வெங்காயத்தை அதில் சேர்த்து வெங்காயத்தை நன்றாக வதக்க வேண்டும்.
– Advertisement –

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் பெருங்காயத்தூள், அரைத்து வைத்திருக்கும் பொடி இவற்றை சேர்த்து ஐந்து நிமிடம் நன்றாக வதக்க வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து தேவையான அளவு உப்பை சேர்த்து அதில் இரண்டு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வந்ததும் நாம் வேக வைத்திருக்கும் அரிசியை அதில் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
அரிசி, பருப்பு, மொச்சை இவை அனைத்தும் அந்த மசாலாவுடன் நன்றாக கலந்து கொதிக்க ஆரம்பிக்க வேண்டும். இந்த நேரத்தில் அடுப்பை முழுவதுமாக ஏற்றி விட வேண்டும். சாதம் நன்றாக பின்ன ஆரம்பித்ததும் இதில் ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லியை சேர்த்து நெய்யை ஊற்றி நன்றாக கலந்து அடுப்பிலிருந்து இறக்கி விட வேண்டும். மிகவும் சுவையான வித்தியாசமான மொச்சை பருப்பு சாதம் தயாராகிவிட்டது.
இதையும் படிக்கலாமே சீரக குழம்பு செய்முறை
கொங்கு மண்டலத்தை சேர்ந்த சமையலில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய இந்த மொச்சை பருப்பு சாதத்தை நாமும் நம்முடைய வீட்டில் செய்து பார்த்து ருசிப்போம்.

– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

எழுதியவர்: Ganesh Gandhi

எங்கள் சமூக வலைதளப் பக்கங்கள்: 

YouTube | Facebook | Telegram

Scroll to Top
I am Online
I am Online