பயணத் துவையல் செய்முறை | travel time thuvaiyal recipe in tamil

பயணத் துவையல் செய்முறை | travel time thuvaiyal recipe in tamil

Qries

– Advertisement –

பொதுவாக நாம் ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு ஏதாவது ஒரு காரணத்திற்காக பயணத்தை மேற்கொள்ளும் பொழுது வீட்டிலேயே உணவு வகைகளை தயார் செய்து எடுத்துச் செல்வோம். இவ்வாறு நாம் தயார் செய்து எடுத்துச் செல்லும் பொழுது பெரும்பாலும் இட்லி, சப்பாத்தி எலுமிச்சை சாதம், புளி சாதம், தயிர் சாதம் என்று எடுத்துச் செல்வோம். அப்பொழுதுதான் அது கெட்டுப் போகாமல் இருக்கும் என்பதற்காக. அந்த சமயத்தில் இதற்கு தொட்டுக் கொள்வதற்காக சட்னி தயார் செய்வோம். இந்த சட்னியை சற்று பக்குவமாக தயார் செய்யாவிட்டால் அது விரைவிலேயே கெட்டுப் போய்விடும். இதற்காக பலரும் புதினா, கருவேப்பிலை, கொத்தமல்லி என்று சேர்த்து புதினா துவையலை செய்து எடுத்து வருவார்கள். இதற்கான மெனக்கெடு என்பது மிகவும் அதிகமாகவே இருக்கும்.
ஆனால் வீட்டில் இருக்கக்கூடிய தேங்காயை வைத்து எளிமையான முறையில் இந்த துவையலை செய்தோம் என்றால் மூன்று நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாது. பிரிட்ஜில் வைத்து உபயோகப்படுத்துவதாக இருந்தால் பத்து நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாமல் உபயோகப்படுத்தலாம். மேலும் இந்த பொருட்களை பொடியாக அரைத்து வைத்துக் கொண்டால் நாம் நினைக்கும் பொழுதெல்லாம் துவையலை செய்து சாப்பிட முடியும். பல வகைகளிலும் நமக்கு உபயோகப்படக்கூடிய இந்த துவையலை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
– Advertisement –

தேவையான பொருட்கள்

எண்ணெய் – 6 டேபிள் ஸ்பூன்
உளுந்து – 4 டீஸ்பூன்
மல்லி – 2 டீஸ்பூன்
தேங்காய் – ஒரு மூடி
காய்ந்த மிளகாய் – 6
கருவேப்பிலை – 2 கைப்பிடி அளவு
பூண்டு – 10 பல்
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையான அளவு
கடுகு – ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை

செய்முறை
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் மூன்று டீஸ்பூன் அளவிற்கு உளுந்தை சேர்த்து உளுந்தின் நிறம் மாறும் வரை வருக்க வேண்டும். பிறகு அதனுடன் மல்லியை சேர்த்து அதையும் நன்றாக வறுக்க வேண்டும். பிறகு இதை அப்படியே எடுத்து ஒரு தட்டில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்.
மறுபடியும் இதே கடாயை அடுப்பில் வைத்து காய்ந்த மிளகாய், ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து நன்றாக வறுத்து அதையும் தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து தோல் உரித்த பூண்டு, புளி இரண்டையும் சேர்த்து நன்றாக பொன்னிறமாகும் வரை வறுத்து அதையும் எடுத்து தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். கடைசியாக ஒரு மூடி தேங்காயை துருவி அந்த கடாயில் போட்டு தேங்காய் நன்றாக வாசம் வந்து சிவக்கும் வரை வறுத்து அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –

இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் முதலில் கருவேப்பிலை காய்ந்த மிளகாய் போட வேண்டும். அதற்கு மேலே உளுந்து மல்லி போட்டு ஒரு முறை அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அதனுடன் பூண்டு புளி சேர்த்து அரைக்க வேண்டும். இவை அனைத்தும் அரைபட்ட பிறகு கடைசியாக தேங்காய், தேவையான அளவு உப்பையும் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் ஊற்றாமல் அரைத்த இந்த பொடியை நாம் தேவைப்படும் பொழுதெல்லாம் தண்ணீர் கலந்து சட்னியாக தயார் செய்து கொள்ளலாம். எண்ணெயை ஊற்றி பொடியாகவும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
பயணங்களை மேற்கொள்ளும் பொழுது தயார் செய்யக்கூடிய சட்னிக்கு இதில் சிறிதளவு மட்டும் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் ஐந்து டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு உளுந்து சேர்த்துக் கொள்ள வேண்டும். கடுகு பொரிந்து உளுந்து சிவந்ததும் ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலையையும், பெருங்காயத்தூளையும் சேர்த்து நாம் அரைத்து வைத்திருக்கும் சட்னியை அதில் ஊற்றி சட்னியில் இருக்கக்கூடிய தண்ணீர் சத்து அனைத்தும் நீங்கி அது துவையலாக மாறும் வரை குறைந்த தீயில் வைத்து நன்றாக வதக்க வேண்டும். இப்பொழுது துவையல் தயாராகிவிட்டது. இந்த துவையலை இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, எலுமிச்சை சாதம், புளி சாதம், தயிர் சாதம் என்று அனைத்திற்கும் தொட்டு கொள்ளலாம். இதை சாப்பாட்டில் போட்டு பிரட்டியும் சாப்பிடலாம்.
இதையும் படிக்கலாமே நேந்திர பழ ஜாமுன் செய்முறை
திடீரென்று பயணங்களை மேற்கொள்ளும் பொழுது சட்னி செய்வதற்காக கடைக்கு சென்று எந்த பொருளும் வாங்காமல் வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களை வைத்து எளிதில் செய்து விடலாம்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top